திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.60 திருவக்கரை பண் - பஞ்சமம் |
கறையணி மாமிடற்றான் கரிகாடரங் காவுடையான்
பிறையணி கொன்றையினான் ஒருபாகமும் பெண்ணமர்ந்தான்
மறையவன் தன்றலையிற் பலிகொள்பவன் வக்கரையில்
உறைபவன் எங்கள்பிரான் ஒலியார்கழல் உள்குதுமே.
|
1 |
பாய்ந்தவன் காலனைமுன் பணைத்தோளியோர் பாகமதா
ஏய்ந்தவன் எண்ணிறந்தவ் விமையோர்கள் தொழுதிறைஞ்ச
வாய்ந்தவன் முப்புரங்கள் எரிசெய்தவன் வக்கரையில்
தேய்ந்திள வெண்பிறைசேர் சடையானடி செப்பதுமே.
|
2 |
சந்திர சேகரனே யருளாயென்று தண்விசும்பில்
இந்திர னும்முதலா இமையோர்கள் தொழுதிறைஞ்ச
அந்தர மூவெயிலும் அனலாய்விழ ஓரம்பினால்
மந்திர மேருவில்லா வளைத்தானிடம் வக்கரையே.
|
3 |
நெய்யணி சூலமொடு நிறைவெண்மழு வும்மரவுங்
கையணி கொள்கையினான் கனல்மேவிய ஆடலினான்
மெய்யணி வெண்பொடியான் விரிகோவண ஆடையின்மேல்
மையணி மாமிடற்றான் உறையும்மிடம் வக்கரையே.
|
4 |
ஏனவெண் கொம்பினொடும் இளவாமையும் பூண்டுகந்து
கூனிள வெண்பிறையுங் குளிர்மத்தமுஞ் சூடிநல்ல
மானன மென்விழியா ளொடும்வக்கரை மேவியவன்
தானவர் முப்புரங்கள் எரிசெய்த தலைமகனே.
|
5 |
கார்மலி கொன்றையோடுங் கதிர்மத்தமும் வாளரவும்
நீர்மலி யுஞ்சடைமேல் நிரம்பாமதி சூடிநல்ல
வார்மலி மென்முலையா ளொடும்வக்கரை மேவியவன்
பார்மலி வெண்டலையிற் பலிகொண்டுழல் பான்மையனே.
|
6 |
கானண வும்மறிமான் ஒருகையதொர் கைமழுவாள்
தேனண வுங்குழலாள் உமைசேர்திரு மேனியினான்
வானண வும்பொழில்சூழ் திருவக்கரை மேவியவன்
ஊனண வுந்தலையிற் பலிகொண்டுழல் உத்தமனே.
|
7 |
இலங்கையர் மன்னனாகி எழில்பெற்றஇ ராவணனைக்
கலங்கவொர் கால்விரலாற் கதிர்பொன்முடி பத்தலற
நலங்கெழு சிந்தையனாய் அருள்போற்றலு நன்களித்த
வலங்கெழு மூவிலைவேல் உடையானிடம் வக்கரையே.
|
8 |
காமனை யீடழித்திட் டவன்காதலி சென்றிரப்பச்
சேமமே உன்றனக்கென் றருள்செய்தவன் தேவர்பிரான்
சாமவெண் டாமரைமேல் அயனுந்தர ணியளந்த
வாமன னும்மறியா வகையானிடம் வக்கரையே.
|
9 |
மூடிய சீவரத்தர் முதிர்பிண்டிய ரென்றிவர்கள்
தேடிய தேவர்தம்மா லிறைஞ்சப்படுந் தேவர்பிரான்
பாடிய நான்மறையன் பலிக்கென்றுபல் வீதிதோறும்
வாடிய வெண்டலைகொண் டுழல்வானிடம் வக்கரையே.
|
10 |
தண்புன லும்மரவுஞ் சடைமேலுடை யான்பிறைதோய்
வண்பொழில் சூழ்ந்தழகார் இறைவன்னுறை வக்கரையைச்
சண்பையர் தந்தலைவன் தமிழ்ஞானசம் பந்தன்சொன்ன
பண்புனை பாடல்வல்லா ரவர்தம்வினை பற்றறுமே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |